24 Feb 2012

மஞ்சள் காமாலையை தடுக்க வழி


மஞ்சள் காமாலையை தடுக்க வழி

 
காமாலை  என்பது நோயே அல்ல, உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறியே. ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு உட்பட ஸ்கேன்கள் ஆகியவற்றின் மூலம் காமாலை அறிகுறியை துல்லியமாக கண்டறியலாம். மேலும், மஞ்சளாக இருப்பவர்ககள் அனை வருமே, காமாலை அறிகுறியுடன் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. `புளோரசன்ட்' விளக்கின் கீழ் நிற்கும் அனைவரின் தோலும் மஞ்சளாகத் தான் தெரியும்.
 
கேரட், பப்பாளி ஆகியவை சாப்பிடும் போதும் தோலின் மேல் கெரோட்டின் படிந்து சற்று மஞ்சளாகக் காட்சி அளிக்கும். கண் விழியின் மேல் படலத்தின் கீழ் கொழுப்பு படிந்தாலும் தூசியாலும், கண்கள் சில நேரங்களில் மஞ்சளாகத் தெரியும். இதுவும் காமாலை அல்ல. தோலில் படிந்து கறை ஏற்படும் போது தான் அதை காமாலை என்று கூற முடியும். சிறுநீர், வியர்வையிலும் சில நேரங்களில் மஞ்சள் நிறம் வெளிப்படும்.
 
ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பு அணுக்கள் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. அப்போது, `பிலுருபின்' என்ற நிறமும் வெளிப்படும். ரத்தத்தில் இந்த நிறத்தின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும். சிவப்பு அணுக்கள், அளவுக்கு அதிகமாக சிதைந்து போகும் போது, அதை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி, வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் கல்லீரல் அதிக வேலைப்பளுவால் திணறும்.
 
அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். பாரம்பரியமாக சில நோய்கள், மலேரியா, சிலமருந்து வகைகளை உட்கொள்வது ஆகியவற்றால் இது போன்று மஞ்சள் நிற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சை வேர்க்கடலை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கூட சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதில் உள்ள `அப்போடாக்சன்' என்ற உட்கூறு, கல்லீரல் செல்களுக்கு விஷமாக அமைந்து விடும்.
 
சில நேரங்களில் கல்லீரலே பாதிப்படைந்து அளவுக்கு அதிகமான பிலுருபினை வெளியேற்ற முடியாமல் போகும். பிறந்த குழந்தைகளுக்கு, கல்லீரல் செல்களை போதுமான அளவு வளர்ச்சி அடையாமல் போவது. தாய்க்கும், குழந்தைக்கும் ரத்தப் பிரிவு ஒத்து போகாமல் இருத்தல் ஆகியவற்றால் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். எனினும் இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியதே.
 
ஹெப்பாடைட்டிஸ் ஏ,பி,சி,டி,இ, ஹெர்பர், லெப்போ பைரேசிஸ், சைம்போமெகா வைரஸ் ஆகியவை கல்லீரல் செல்களை பாதித்து, மஞ்சள் காமாலையை உருவாக்குகின்றன. மது குடித்தால் கல்லீரல் விஷமாகி விடும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்தினால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படும்.
 
கல்லீரல் நாளங்களில் கல், புற்று நோய் அடைப்பு உருவாகி தடை ஏற்படும் போது, பிலுருபின் வெளியேறுவதில் சிக்கல் உருவாகும். இதனால் போதுமான அளவிலான வெளியேற்றம் கூட தடைப்பட்டு விடும். இதனால் பிரச்சினை உருவாகும். அனைத்து விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்ற முடியாது.
 
ரத்தம் மற்றும் சிறுநீரை அறிவியல் ரீதியான பரிசோதனை செய்து எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பிறகே, சிகிச்சை துவங்க வேண்டும், இளைஞர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையில் 80 சதவீதம் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரசால் உருவாகிறது. இதற்கு சிகிச்சை தேவைப்படாது. சில வாரங்களில் தானாகவே குணமாகி விடும். நோய்க்கான காரணத்தை கண்டு பிடித்தால், சில வகையான மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம்  என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.
 
அறிகுறிகள்.......
 
 
மஞ்சள் காமாலை ஆபத்தான நோய்.கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளது."கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ'' என்ற வைரசே கல்லீரலை  தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.
 
சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
 
கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
ரத்தப் பரிசோதனையின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை என்று தெரிந்த உடன் முறையான சிகிச்சை மற்றும் பத்தியம் மேற்கொள்வது அவசியம். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையான குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும்.
 
உணவுமுறை.......
 
கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணைய், நெய், எண்ணைய் பொருட்கள் நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது. மிகுந்த காரமான உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது. காபி, டீ மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் பெண்கள் முறையாக பரிசோதனை செய்து தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும்.
 
கர்ப்பிணிப் பெண்களுக்கு........
 
கர்ப்பமுற்றிருக்கும் போது தாய்க்கு காமாலை வருவது என்பது மிக அரிதாக நடக்கக் கூடியதாயிருந்தாலும் அதனுடைய விளைவுகள் மிகவும் கடுமையானதாக தாய்க்கும் சேய்க்கும் அமைகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் மஞ்சள் காமாலை மிகவும் மோசமான விளைவுகளை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்துகிறது. ஹெபடிடிஸ் ஜி.பி. என்னும் வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. 
 
நம் நாட்டில் 3.20 சதவீதம் வரை மஞ்சள் காமாலை நோயால் கர்ப்பமுற்ற பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஹெபடிடிஸ் இ வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களில் 10.20 சதவீதம் பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து நாம் அறிய வேண்டியது எவ்வாறு கர்ப்பிணிப் பெண்களை நோய் கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மற்றவர்களுக்கு இந்த நோய் தொற் றாமல் தடுத்துவிடும். அவர்களுக்கு சரியான அளவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய அளவில் உணவு களைக்கொடுத்து பராமரிக்க வேண்டும். அந்தந்த வைரஸ் கிருமி தாக்குதலுக்கு தக்க தடுப்பூசி மற்றும் இம்முனோகுளோபுலின் கொடுக்கப்பட வேண்டும்.
 
பாதுகாப்பு முறை.......
 
மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேவண்டும். குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
 
சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும். தண்ணீர், பால் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி பிறகு குடிக்கலாம். கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 
நோய் முற்றிலும் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி மூலிகை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்என்கிறார்சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர்  டாக்டர் திருத்தணிகாசலம்.

0 comments:

Post a Comment